விஜய் பிரசாரம்! நாகையில் மின்தடை!
விஜய் பிரசாரத்தை அடுத்து நாகையில் மின் தடை செய்யப்பட்டது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்துப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த திருச்சி கூட்டத்தில் தவெக தொண்டர்கள் விஜய்யை காண்பதற்காக உயரமான கட்டடங்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்களில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையை ஏற்று, விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விஜய் வருகை மற்றும் புறப்படும் போது அவரின் வாகனத்துக்கு பின்னால் தொண்டர்கள் வரக் கூடாது, உயரமான இடங்களிலும், அரசு, தனியார் கட்டடங்கள் மீதும் ஏறக் கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.