மின் தடை வெறும் தடையல்ல.. மக்களின் அன்றாட ஓட்டத்துக்கு போடும் பிரேக்!
மின் தடை வெறும் தடையல்ல மக்களின் அன்றாட ஓட்டத்துக்கு போடும் பிரேக் என்பது பற்றி..
சென்னை மாநகரில் மக்கள் அன்றாடம் பேசும் விவகாரங்களில் ஒன்றாக மின் தடை சேர்ந்துகொண்டது. ஏற்கனவே கொளுத்தும் வெய்யிலுக்கு இடையே என்னதான் மின் விசிறி சுழன்றாலும் காற்று போதாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், மின் தடை ஒருபக்கம் மக்கள் வெறுப்பேற்றி வருகிறது.
மின் தடை பற்றி குறைகூறினாலே.. மின் தடை இதுவரை ஏற்பட்டதே இல்லையா? முந்தைய ஆட்சிகளில் மின் தடையைப் பார்த்ததில்லையா? என்ற கேள்விகளும் வந்து சேர்ந்துவிடுகின்றன.
ஆனால், மின் தடை என்பது ஒரு பிரச்னை அல்ல. அதனால் ஏற்படும் அடுக்கடுக்கான பிரச்னைகள் மக்களின் வாழ்க்கை சுழற்சியையே பிரேக் போட்டு நிறுத்தி விடுகிறது.
Advertisement
Advertisement
பகலில் ஏற்படும் மின் தடை காரணமாக சமையல் செய்வது, மோட்டர் போடுவது, துணி துவைப்பது, தையல் இயந்திரங்களில் துணி தைப்பது என அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாராக 25 நாள்களுக்கும் மேல் இந்த மின் தடை பிரச்னை உள்ளது. இப்படி அன்றாடப் பணிகளை செய்ய அத்தியாவசியமான மின்சாரம் தடைபட்டால், பணிகளும் தடைபடுகின்றன.
முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை. மின் தடை ஏற்பட்டால் ஏதோ 10 அல்லது 20 நிமிடங்கள் இல்லாமல் பல மணி நேரம் தடைபடுகிறது.
பகலில் இவ்வாறு என்றால் இரவில் சொல்லவே வேண்டாம் என்கிறார்கள் மக்கள். முன்பெல்லாம் தண்ணீர் குடங்களுடன் பகலில் சாலை மறியல் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போதோ மின் தடைக்காக இரவில் சாலை மறியல்கள் நடக்கின்றன.
சில இடங்களில் மின்சார சேவை இருந்தாலும் அதில் ஒரு நிலையற்றத் தன்மை காணப்படுகிறது. இது மின் தடையை விடக் கொடுமையானது.
அம்பத்தூர், மேனாம்பேடு உள்ளிட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மின் தடை ஏற்பட்டு 12 மணிக்குப் பிறகுதான் வந்தது. இதனால் கைக் குழந்தைகள் கதறி அழுதன. முதியவர்கள் காற்றும் இல்லாமல் வெளியே செல்லவும் முடியாமல் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் சாலைகளில் மிகவும் அச்சத்துடன் பயணித்தனர்.
12 மணி வரை மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல், காலையில் பள்ளி, கல்லூரி, பணிக்குச் செல்வோர் மிகவும் அசதியாகவே எழுந்துப் புறப்பட்டுச் சென்றனர்.
கைக் குழந்தைகள், பள்ளிச் செல்லும் சிறு குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் நிலைதான் மிகவும் மோசம். குழந்தைகள் சரியாக தூங்காமல் போனால், காலையில் அவர்களை எழுப்ப முடியாது. பள்ளிக்குச் சென்றாலும் தூங்கி விடுவார்கள் என்று பயம் இருக்கும்.