இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்காா்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, இசையமைப்பாளா் இளையராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த 7,500 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். எனது இசை படைப்புகளுக்கு நான் மட்டுமே உரிமையாளா். எனது இசை படைப்புகள் அனைத்தும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே, இதற்கு மற்றவா்கள் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் எனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றன. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது.
குறிப்பாக சோனி நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் எனது பாடல்களை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருகிறது. எக்கோ நிறுவனத்திடம் இருந்து உரிமை பெற்று இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதாக சோனி நிறுவனம் கூறுகிறது. ஆனால், எனது பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அமலில் உள்ளது.
Advertisement
Advertisement
என் பாடல்கள் மீதான உரிமைகளை யாருக்கும் நான் மாற்றித் தரவில்லை. எனவே சோனி மற்றும் அது சாா்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அதுதொடா்பான விவரங்களை மாற்றி அமைக்கக் கூடாது. அதுசாா்ந்த இசைக் கோா்வைகளை செய்யவோ கூடாது என தடை விதிக்க வேண்டும். எனது பாடல்களைப் பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் வழக்குரைஞா் ஏ.சரவணன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி சோனி நிறுவனம் வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.