முகப்பு
தமிழ்நாடு

விஜய் பிரசாரத்திற்கு 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்: ஏடிஜிபி விளக்கம்

விஜய் பிரசாரத்துக்கு மொத்தம் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.

Updated On : 28 செப்டம்பர், 2025 at 11:13 AM
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.
பகிர்:

விஜய் பிரசாரத்துக்கு மொத்தம் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.

இதுறித்து கரூரில் செய்தியாளர்களுடம் பேசிய அவர், கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் பிரசாரம் செய்ய செப்.23ஆம் தேதி தவெகவினர் மனு கொடுத்தனர். அதற்கு அடுத்தநாள் உழவர் சந்தை மைதானத்தில் அனுமதி கேட்டனர். அது மிகவும் குறுகலான இடம். மறுபடியும் செப்.26இல் மனு கொடுத்து தவெகவினர் அனுமதி வாங்கினர். இடத்தை அளவீடு செய்த பார்த்து 250 பேருக்கு ஒரு போலீஸ் என பாதுகாப்பு தருவது வழக்கம்.

மிதமான ஆபத்துள்ள இடங்களில் 100 பேருக்கு ஒரு போலீஸ், அதிக ஆபத்து இடங்களில் 50 பேருக்கு ஒரு போலீஸ் தருவது வழக்கம். 20 பேருக்கு ஒரு போலீஸ் என்ற அளவில் பாதுகாப்பு தந்தோம். எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும் கூட்டம் தடுக்கும்போது காவல் துறையால் என்ன செய்ய முடியும். கரூர் ரவுண்டானாவுக்கு விஜய் வரும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. நாமக்கல்லில் நடக்க வேண்டிய பிரசாரமும் தாமதமாகி முடிவதற்கு 4 மணி நேரம் ஆனது.

பிரசாரம் இடத்திற்கு தவெக தலைவர் விஜய் வருவதற்கு 2 மணி நேரம் ஆனது. விஜய் பிரசாரக் கூட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவம் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வந்தது. அதிக கூட்டத்தால் காயமடைந்தோரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்வதற்கும் முடியவில்லை. நாமக்கல்லில் 34 பேர் அதிக வெயிலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தனர்.

கரூர் பலி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் - ஆட்சியர்

இதுவரை தவெக சார்பில் நடந்த மற்ற இடங்களிலும் அதிக எண்ணிக்கையில்தான் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம். திருச்சியில் 650, அரியலூரில் 787, பெரம்பலூரில் 480, நாகையில் 410 போலீஸார் பணியில் ஈடுபட்டனர். விஜய் பிரசாரத்துக்கு மொத்தம் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விதிகளின்படியே போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்ததும் உடனடியாக முதல்வரின் உத்தரவின்பேரில் கரூர் வந்தேன்.

எந்த அமைப்பாக இருந்தாலும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் போதிய பாதுகாப்பு தர முடியும். எதிர்க்கட்சித் தலைவர் வந்தபோது 137 போலீஸ்தான் பாதுகாப்பு பணியிலிருந்தனர். ஒழங்கமைக்கப்பட்ட கூட்டம், முறையான வழிநடத்துதல் போன்ற காரணங்களால் எல்லாம் அன்று சுமூகமாக நடந்தது. கரூர் டிஎஸ்பி நேற்று தவெக தலைவர் விஜய்யின் குழுவிடம் 50 மீட்டருக்கு முன்பே, இங்கு நிறுத்திக்கொள்ளலாம் என்றுள்ளார்.

ஆனால் அந்த குழுவினர் மறுத்துள்ளனர். தொடர்ந்து விஜய்யை அவரது குழுவினர் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற நிலையில், கூட்டத்திலிருந்த சிலரால் அவரை பார்க்கமுடியவில்லை. இதில் இருபக்கமும் இருந்து வந்தவர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

summary

Law and Order ADGP Davidson Devasirvadham explained that a total of 500 police personnel were deployed for security purposes for Vijay's campaign.

முழு கட்டுரையைப் படிக்க →