கரூர் தவெக கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நேற்றைய தினம் நடந்த துயரச் சம்பவம் அனைத்து தமிழக மக்களின் நெஞ்சை உலுக்குகின்ற சம்பவமாக நடந்திருக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
நடந்த சம்பவம் குறித்து தீவிர விரிவான சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுவே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணமும், அரசுப் பதவியும் வழங்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் அந்தந்தக் குடும்பங்களுடைய சூழ்நிலைகளைப் பொறுத்து, அதிகமாக நிதி கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பை முறைபடுத்த வேண்டும். தமிழக அரசும் கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் இன்று பலியான நிலையில் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.