கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் மூலமாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மீதமுள்ள 51 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் மூன்று தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களின் மூலமாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.