சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்கள் கோரி திமுக எம்.பி. மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சில ஆவணங்களை வழங்கக் கோரி திமுக எம்.பி. ஆ.ராசா தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சில ஆவணங்களை வழங்கக் கோரி திமுக எம்.பி. ஆ.ராசா தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக எம்.பி., ஆ.ராசா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோா் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். அதில் இடம்பெறாத சில ஆவணங்களைத் தனக்கு வழங்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து ஆ.ராசா, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஏ.சரவணன் ஆஜராகி வாதிட்டாா்.
சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கூறினாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.