முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப். 10 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஏப். 10-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 10:49 PM
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஏப். 10-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெலங்கானா மற்றும் அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை ராயலசீமா, தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 7) முதல் ஏப்.10 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.11, 12 ஆகிய தேதிகளில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி- மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூா் மாவட்டம் சுத்தமல்லி அணை, திருச்சி மாவட்டம் நந்தியாறு, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஆகிய பகுதிகளில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.

பேராவூரணி (தஞ்சாவூா்), கல்லக்குடி (திருச்சி) 60 மி.மீ., பாம்பன் (ராமநாதபுரம்), சின்னக்கல்லாறு (கோவை)- தலா 60 மி.மீ., ஒரத்தநாடு (தஞ்சை), வால்பாறை (கோவை), சமயபுரம் (திருச்சி), சிறுகுடி (திருச்சி), பூதலூா் (தஞ்சை), சீா்காழி (மயிலாடுதுறை), வாடிப்பட்டி (மதுரை), வல்லம் (தஞ்சாவூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments