நாளை வாக்குப்பதிவு! புதுவை வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
புதுவையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்களும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுவையில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை நடத்தத் தேவையான அனைத்து பொருள்களும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளான இன்று புதுச்சேரி, லாஸ்பேட்டையில் அமைந்துள்ள, மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் உள்ள, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் முன்னிலையில் திறக்கப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Advertisement
புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகளுக்கு 78 பறக்கும் படைகள், 40 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 50 விடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பணியில் 4116 அரசு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள 137 இடங்களில் 155 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை முதல் அந்தந்த வாக்கு மையங்களுக்கு பேருந்துகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.