முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

6,999 போக்சோ வழக்குகள் பதிவு - மயிலாடுதுறையில் இபிஎஸ் பிரசாரத்திலிருந்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 10:13 pm IST
மயிலாடுதுறையில் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - @AIADMKOfficial
பகிர்:

மயிலாடுதுறை : தமிழகத்தில் திமுக ஆட்சியில் 18,000 பாலியல் வழக்குகள்; 6,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதாக மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அஇஅதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தமது கட்சி அணி சேர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :

“கடலூர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே சின்னத்தை மறந்துவிட்டார் ஸ்டாலின். அவருடைய சின்னத்தையே அவர் மறந்துவிட்டார். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?

Advertisement

Advertisement

எடப்பாடி பழனிசாமி ஒண்ணுமே செய்யவில்லை என்று விராலிமலையில் அவர் பேசினார். அதிமுக ஆட்சி 2011 - 2021 வரைக்கும் எந்தத் திட்டத்தையும் நாட்டு மக்களுக்குச் செய்யவில்லை என்று சொல்கிறார். உண்மையா?

இந்த மாவட்டத்தை உருவாக்கியதே அதிமுக அரசாங்கம்.

இன்றைக்கு இளைஞர் சமுதாயம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞரும் தயவுசெய்து சிந்திக்க வேண்டும். இன்றைக்கு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது. நாம் பெற்ற செல்வங்கள் நம் கண்முன்னே சீரழியக் கூடிய நிலையை இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது.

எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை சர்வ சாதாரணமாக நடக்கிறது. கிராமத்திலிருந்து நகரம் வரை, மூலை.. முடுக்கு.. வீதி... எல்லா இடங்களிலும் போதைப்பொருள் விற்கப்படுகிறதா?

இன்றைக்கு பள்ளிக்கு அருகில், கல்லூரிக்கு அருகில் சர்வ சாதாரணமாக போதைப் பொருள் விற்கிறது. நம்முடைய டீன் - ஏஜ் அந்த வயசில் ஒண்ணும் தெரியாது. அப்படிப்பட்ட அந்த வயதில் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி இந்த ஆட்சியில் சீரழியக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?

கஞ்சா அடித்துவிட்டாலே என்ன செய்வதென்றே தெரிவதில்லை. கொலை செய்கிறான், கொள்ளையடிக்கிறான், பாலியல் வன்கொடூரத்தில் ஈடுபடுகிறான். அதிலும், சிறுமிகள், பெண்கள், பாட்டிமார்களைக்கூட விட்டுவைப்பதில்லை. பாட்டிமார்களைக்கூட தனியாக விட்டுவிட்டு வர முடியாது. அந்தளவுக்கு மோசமான ஆட்சி. இதை நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. பத்திரிகையில், ஊடகத்தில் வெளிவருகிற செய்தி. பாதிக்கப்பட்டவர்கள் - சிறுமிகள், பெண்கள், வயது முதிர்ந்த பெண்கள். இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?

18,000 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 18,000 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதைச் சிந்திக்க வேண்டும். இன்று இருக்கிற சமூக நலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் பேசும்போது, ‘தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் 6,999 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதற்கு நிவாரணமாக ரூ. 84 கோடி கொடுக்கப்பட்டது’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இந்த ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சி!

இன்றைக்கு பத்திரிகையிலும் ஊடகத்திலும் பார்த்தீர்களென்றால், அந்தக் காலத்தில் தங்கம் என்ன நிலவரம்? வெள்ளி நிலவரம்? என்று வரும். இப்போதெல்லாம், கொலை நிலவ்ரம் என்ன? பாலியல் சீண்டல் நிலவரம் என்ன? போதைப் பொருள் நிலவரம் என்ன? இதுதான் இப்போது வருகிறது. இப்படிப்பட்ட செய்திகள்தான் ஊடகத்திலும் பத்திரிகையிலும் வருகிறது. இந்த ஆட்சியில் தமிழகம் தலை தொங்கிப் போயிருக்கிறது.திமுக அமைச்சரே வாக்குமூலம் சொல்கிறார்கள்.

அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தவுடன், 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் கஞ்சா அறவே ஒழிக்கப்படும். தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும்” என்றார்.

summary

Edappadi Palaniswami speech in Mayiladuthurai echoes for narcotics free TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.