ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?
ராகுல் காந்தியின் தமிழகம் வருகை குறித்து...
காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக ஏப். 18 ஆம் தேதிக்கு மேல் வரவுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மதுரை திருநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
தமிழகத்தில் ராகுல் காந்தி எப்பொழுது தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார்? முதலமைச்சருடன் இணைந்து பிரசாரம் செய்கிறாரா? என்ற கேள்விக்கு, ”ராகுல் காந்தி அவசியம் வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும், புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டதால், அதன் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
கடந்த ஏப். 12 ஆம் தேதி அம்பேத்கருடைய பிறந்தநாளை முன்னிட்டு 'ரன் ஃபார் அம்பேத்கர்' என்று ஒரு மிகப்பெரிய ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்காக ஒரு நாளும், இன்று(ஏப். 14) ராகுல் காந்தி பெங்காலியில் மூன்று பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
நாளை எதிர்க்கட்சித் தலைவருடைய கூட்டம். நாளை மறுநாள் முதல் மூன்று நாள் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. ரொம்ப முக்கியமான கூட்டம். அதனால், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் கடைசி நான்கு நாள்கள் பிரசாரம் இருக்கிறது. அந்த நான்கு நாள்களில் அவசியம் ராகுல் காந்தி தமிழகம் வருவார் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். ராகுல் காந்தி மட்டுமல்ல, பிரியங்கா காந்தியும், பிரசாரத்திற்கு வர இருக்கிறார்” என்றார்.
முதல்வரும் ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் செய்வார்களா என்ற கேள்விக்கு, ”அது இரண்டு கட்சிகளுடைய தலைவர்களும் சேர்ந்து பேசி, முதலமைச்சருடைய பயணத்தோடு சேர்ந்து இந்தப் பயணத்தை எப்படி வைப்பார்கள் என்பதைப் பார்த்து முடிவு செய்வார்கள்.
ராகுல் காந்தி மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக நடைபெறும் பிரசாரத்திற்காக, குறைந்தபட்சம் இரண்டு நாள் பிரசாரம் செய்வார் என்பது என்னுடைய நம்பிக்கை” என்றார்.