திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பற்றி..
திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
கடலூர் தொகுதியில் நாளை பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில், சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூர் பிரசாரம் அனுமதி பெற்று இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார்.
Advertisement
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளிவாகனத்தில் நின்றபடியே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மேலும், விமானநிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை சாலையில் வலம் வருகிறார்.
தவெக தலைவர் விஜய் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை 27 கட்டுப்பாடுகளுடன் மாநகர காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.