அதிகரிக்கும் வாக்குப் பதிவு; மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் : செளமியா அன்புமணி
ஆட்சி மாற்றத்தை விரும்புவதாலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்து வருவதாக செளமியா அன்புமணி கருத்து...
ஆட்சி மாற்றத்தை விரும்புவதாலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி வேட்பாளர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில் தருமபுரியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த பிறகு சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் செளமியா அன்புமணி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
Advertisement
''அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தருமபுரியில் போட்டியிடுவதால், அங்கு உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். நண்பகலிலேயே 40% வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதே இதன் பொருள்.
பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் நேற்றே தொகுதிக்கு வந்து உற்சாகமாக வாக்களிக்கின்றனர். தருமபுரியில் 100 வெற்றி வாய்ப்பு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்'' எனக் குறிப்பிட்டார்.