வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!
உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் லட்சக்கணக்கானோர் வாக்களிக்க முடியவில்லை என தவெக புகார்...
உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் லட்சக்கணக்கானோர் வாக்களிக்க முடியவில்லை என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் இன்று (ஏப். 23) தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவெகவின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
Advertisement
அப்போது அவர்கள் பேசியதாவது:
''மக்களுக்கு உரிய முறையில் போக்குவரத்து வசதி செய்துதரவில்லை என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். பேருந்துகளுக்காக மக்கள் 7 - 8 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஜனநாயகக் கடமையாற்ற பலர் வந்துள்ளனர். செனையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
ஆனால், சென்னையில் இருந்து மக்கள் செல்ல சரியான முறையில் போக்குவரத்து வசதி செய்துதரப்படவில்லை. நேற்று இரவு முதல் சென்னையில் பேருந்து நிலையங்கள் முடக்கப்பட்டன. பேருந்து வசதிகள் சரியாக செய்துகொடுக்கப்படவில்லை. கைக்குழந்தையுடன் பல பெண்கள் காத்திருந்தனர்.
பொங்கல், தீபாவளிக்கு செய்வதைப்போல அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்கியிருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்துத் துறை செயலர்கள் அவ்வாறு செய்யவில்லை.
வேட்பாளர்களாக இருப்பதால் எங்களால் பேருந்து நிலையம் செல்ல முடியாது. ஆனால், அதிகாரிகளை அங்கே அனுப்பி ஏன் சரி செய்யவில்லை.
மக்கள் தன்னெழுச்சியாக ஜனநாயகக் கடமையாற்ற தயாராக இருக்கும்போது, முறையாக போக்குவரத்து வசதிகளை ஏன் செய்துதரவில்லை. முதல்வரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். வேண்டுமென்ற பேருந்துகளை செயல்படுத்தவில்லை.
தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் பேசும்போதும் அவர்களும் வேகமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலுக்காக இதனைப் பேசவில்லை. சென்னை மட்டுமல்ல, மதுரை, கோவையில் இருந்து கூட பேருந்துகள் இயக்கப்படவில்லை. உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், மக்கள் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை'' எனக் குறிப்பிட்டார்.