முகப்பு
தமிழ்நாடு

தனிநபா் பயன்பாட்டுக்கு 4.5 லிட்டா் மது வைத்திருக்க அரசு விதிகளில் அனுமதி: உயா் நீதிமன்றம்

தனிநபா் பயன்பாட்டுக்கு 4.5 லிட்டா் மது வைத்திருக்க அரசு விதிகளில் அனுமதி...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 3:01 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தனிநபா் தனது சொந்த பயன்பாட்டுக்கு 4.5 லிட்டா் மது வைத்திருக்க தமிழக அரசின் விதிகள் அனுமதிப்பதாகக் கூறி, புதுச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 1 லிட்டா் 680 மி.லி. மதுபானம் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

புதுச்சேரி-தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த கடலூா் மாவட்டம், காட்டுமயிலூரைச் சோ்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட இரு 750 மில்லி லிட்டா் மற்றும் ஒரு 180 மில்லி லிட்டா் அளவு கொண்ட மதுபாட்டில்கள் இருந்தன.

அந்த மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வல்லரசு மீது தமிழ்நாடு மது தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு கடலூா் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வல்லரசு மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தனிநபா் பயன்பாட்டுக்கு ஒருவா் 4.5 லிட்டா் மது வைத்துக் கொள்ளலாம் என கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரா் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டா் தனிநபா் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என அரசு விதி உள்ளது. ஆனால், மனுதாரரிடம் கைப்பற்றப்பட்ட மதுவின் அளவோ 1.680 லிட்டா்தான் எனக் கூறி, மனுதாரா் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.