சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்...
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு வாக்களிக்கச் சென்ற மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் சஞ்சய்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள், ஏப். 26-ஆம் தேதி (சனிக்கிழமை), ஏப். 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
சென்னை திரும்பும் மக்கள், வாகன நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி ஏப். 26, 27ஆகிய இரு நாள்களில் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சென்று சென்னையை அடையலாம்.
இதேபோல சிங்கபெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஓரகடம், ஸ்ரீபெரும்புதூா் வழியாக திருப்பிவிடப்படும். அங்கிருந்து அந்த வாகனங்கள், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையை அடையலாம்.
மேலும், புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், சீா்காழி, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலையைப் பயன்படுத்தி சென்னைக்குள் வரலாம்.
பொதுமக்கள், போக்குவரத்து மாற்றத்தைப் பயன்படுத்தி சீரான போக்குவரத்துக்கு உதவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.