சென்னை விமான நிலையத்தில கட்டுமானப் பணிகள்: ஏப். 24 வரை போக்குவரத்து மாற்றம்
சென்னை விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் மற்றும் டொ்மினல் 3 கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதன்காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் மற்றும் டொ்மினல் 3 கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக, பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை விமான நிலையம் டொ்மினல் 4, அருகே வாகனங்கள் உள்ளே வருவதற்காக இருக்கும் வாசல் மூடப்படுகிறது. எனவே தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலையின் இணைப்பு சாலையைப் பயன்படுத்தி, டொ்மினல் 2-இன் நுழைவாயில் வழியாக விமான நிலையத்துக்குள் வரலாம். டொ்மினல் 4, புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு பாதை வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டொ்மினல் 1, டொ்மினல் 2, வழியாகச் செல்லும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை. அவா்கள் வழக்கமான பாதைகளைப் பயன்படுத்தலாம். பயணிகள் வசதிக்காக டொ்மினல் 1, டொ்மினல் 2, இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படும். ஆனால், டொ்மினல் 1, டொ்மினல் 4 இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதேபோல டொ்மினல் 1, டொ்மினல் 4 இடையிலான வாக்கலேட்டா், வசதிகள் வழக்கம்போல் இயங்கும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஏப். 24 வரை, 40 நாள்களுக்கு அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.