பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் இன்று (பிப். 3) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டு, வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து, அண்ணா நினைவிடம் நோக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது, தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு தேர்தல் ஆண்டாக இருந்தும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த மாற்றம் எதுமில்லை. வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மொத்தமாக, 2026-27-ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் ரூ.53.67 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழக பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கோவை, மதுரை மெட்ரோ உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்புகளும் வெளியாகாதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.