சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் இன்று(பிப். 16) நேரில் ஆஜராகியுள்ளனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவராக அண்ணாமலை இருந்தபோது, 2023ல் 'திமுக பைல்ஸ்' என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்கள் மற்றும் அவர்கள் மீதான முறைகேடுகளை வெளியிட்டார்.
அதில், திமுக எம்பி. டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம் கோடி என்றும் கூறி அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து டி.ஆர். பாலு, தன்னுடைய மற்றும் குடும்பத்தினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. டி.ஆர். பாலு, அண்ணாமலை ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.
அப்போது டி.ஆர். பாலு தரப்பு, "மத்திய அமைச்சராக இருந்தபோது நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 10 மீன்பிடி கப்பல்கள் வாங்கியதாக மு.க. அழகிரி விஷயம் தெரியாமல் பேசியுள்ளார். அதனை ஆதாரமாக வைத்து அண்ணாமலை என் மீது குற்றம் சாட்டியுள்ளார். நான் அமைச்சராக இருந்தபோது 10 கப்பல்கள் வாங்கவில்லை, 2 கப்பல்கள்தான் வாங்கினேன். சேது சமுத்திரத் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அது காமராஜரின் கனவுத் திட்டம்" என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். இரு தரப்பிலும் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.