சென்னையில் மோடி நாளை ஆலோசனை: அண்ணாமலைக்கு கட்டாய அழைப்பு?
பிரதமர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு...
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப். 4) நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில் தொடர்ந்து நாளை தமிழகத்தில் ஒரு முக்கிய பாஜக ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். வேட்பாளர்கள் தேர்வு பற்றிய கூட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அண்ணாமலை கட்டாயமாக இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக கூறி வருகிறார். அவரை தேர்தலில் போட்டியிட வைக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில்தான் நாளை பிரதமர் மேற்கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் கேரளத்தில் இன்று பிரசாரத்தில் உள்ள அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.