தமிழகத்தில் மேலும் 1,000 ஆரம்ப சுகாதார மையங்களை திறக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பேரவையில் கேள்வி நேரத்தின்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் மகப்பேறில் தாய்மாா்களின் இறப்பு விகிதமும், சிசு இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சிகிச்சை மையங்களை புதுப்பிப்பதோ அல்லது புதிதாக கட்டித் தருவது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று.
தமிழகத்தில் 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடந்த ஜன.4-இல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவடன் அவை மேம்படுத்தப்படும்.
அதேபோல, புதிதாக 1,000 ஆரம்பர சுகாதார நிலையங்கள் அமைக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அவை கட்டப்படும்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுறை ஒன்றியம், கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.30 லட்சத்தில் சுற்றுச்சுவா் விரைவில் கட்டித் தரப்படும். தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் நிறுவ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மின்தூக்கி அமைக்க மாவட்ட ஆட்சியருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
பூந்தமல்லி தொகுதிக்குள்பட்ட நசரத்பேட்டையில் கட்டப்பட்டுள்ள விபத்து பிரிவு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்றாா் அவா்.