புது தில்லி : தனி நபர்களின் செலவு, பணம் செலுத்தும் முறை, வங்கிப் பணத்தின் பாதுகாப்பு போன்றவை, அவர் எந்த வகையான வங்கி அட்டையைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொருத்து மாறுபடுகிறது.
பெரும்பாலான மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு என இரண்டையும் பயன்படுத்தினாலும்கூட, ஒவ்வொரு கார்டும் பணப்பரிமாற்றத்தில் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது.
டெபிட் கார்டுகள் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். கிரெடிட் கார்டுகள் முதலில் பொருளை வாங்கிவிட்டு பின்னர் தொகையை செலுத்த அனுமதிக்கும்.
இதில் எந்த வகையான கார்டுகள் எந்த வகையான செலவினங்களுக்கு உகந்தது, சிறந்தது என்பதை ஒருவர் புரிந்துகொள்ளும்பட்சத்தில், பாதுகாப்பான மற்றும் பணத்தின் மதிப்பை உணர்ந்தவராக ஒருவரை மாற்றும் என்கிறார்கள்.
அதாவது, கிரெடிட் கார்டுகள் என்றாலே கடனாளி ஆக்குபவை அல்ல, அதில் நன்மைகளும் இருக்கின்றன, டெபிட் கார்டுகளை விடவும் கிரெடிட் கார்டுகள் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றன அதனை உரிய முறையில் பயன்படுத்துபவர்கள்.
கிரெடிட் கார்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன?
ஒருவர் டெபிட் கார்டு மூலம் பொருள் வாங்கும்போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். வங்கிக் கணக்கில் பணமில்லையேல் வாங்க முடியாது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும், கணக்கில் வரவு குறைக்கப்பட்டு, பணம் உடனடியாக எடுக்கப்படும். ஆனால், கிரெடிட் கார்டு மூலம், ஒருவர் குறிப்பிட்ட வரம்பிற்குள் பணத்தைச் செலவழித்து, பின்னர் அதற்குரிய பணத்தை செலுத்தும் வசதி கிடைக்கிறது.
கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகளுடன் ஒப்பிடும் போது, சிறந்தா என்பதே இங்கு கேள்வி அல்ல, சரியான இடத்தில், சரியான அட்டையைப் பயன்படுத்துவதுதான் முக்கியம் என்பதுதான்.
கிரெடிட் கார்டு செலவினமும் சுழற்சியும்
உங்களிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஒரு கட்டுப்பாட்டுடன் செலவுகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. சிலருக்கு குறிப்பிட்ட தேதிக்குள் மாத வருமானம் வராமல் இருக்கலாம், ஒரு சீரற்ற வருமான முறை இருக்கலாம். அந்த நேரங்களில் அவர்களுக்கு கிரெடிட் கார்டு கைகொடுக்கும். இந்த சரியான சுழற்சியில் உங்களைச் சுழல வைக்க கிரெடிட் கார்டு உதவலாம்.
முழு கட்டணம் செலுத்த அவகாசம்
பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்த அவகாசங்களை வழங்குகின்றன, இது ஒருவர் கிரெடிட் கார்டு கட்டணத்தை முழுமையாகச் செலுத்தும்போது அந்தத் தொகைக்கு வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் செய்கிறது.
சிபில் ஸ்கோர்
கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து சரியான முறையில் பயன்படுத்தி உரிய நேரத்தில் பணம் செலுத்துவதும் சிபில் ஸ்கோர் உயர வழிவகுக்கும். ஆனால், டெபிட் கார்டை எவ்வளவு பயன்படுத்தினாலும் சிபில் ஸ்கோர் உயராது.
பணப் பாதுகாப்பு
கிரெடிட் கார்டுகள் மூலம் செலவிடும்போது பணப் பரிவர்த்தனை ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படாததால், மோசடி நடந்தாலும் அதனை திரும்பப் பெற கால அவகாசம் கிடைக்கலாம். உங்கள் சொந்தப் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங்
கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது பாதுகாப்பானது. கிரெடிட் கார்டு பரிவர்த்தனை என்பதால் வங்கிக் கணக்கில் பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படாது.
அவசரகால உதவி
ஒருவரிடம் பெரிய அளவில் சேமிப்பு இல்லாதபோது கிரெடிட் கார்டுகள் பணப் பயன்பாட்டின் சுதந்திரத்தை வழங்குகின்றன. உங்களிடம் பணம் இருப்பதற்கு இணையாக, கிரெடிட் கார்டுகள் அவசரகாலத்தில் உதவும்.
பயணச் சலுகைகள்
கிரெடிட் கார்டுகள் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதால் வெளிநாடு, வெளியூர் பயணங்களை எளிதாக்குகின்றன, மேலும் சர்வதேச பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
எனவே, திட்டமிட்டு குறிப்பிட்ட செலவுகளை கிரெடிட் கார்டு மூலம் மேற்கொண்டு, அந்த தொகையை அவகாச காலத்துக்குள் சரியாக செலுத்தினால் டெபிட் கார்டுகளை விடவும் கிரெடிட் கார்டுகள் பயனர்களுக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கின்றன என்பது பயன்படுத்தியவர்களின் கூற்றாக உள்ளது.
நிதி மேலாண்மையில் பெரிய அளவில் நிபுணத்துவம் இல்லாதவர்கள், வங்கிகள் அளிக்கும் கிரெடிட் கார்டுகள் பற்றிய புரிதல் இல்லாதவர்கள், முழுமையான தகவல்களைக் கேட்டறிந்துகொண்டு பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.