நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!
மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (பிப். 25) நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் தவெக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
அந்தவகையில், தி.நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து, நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி விஜய் செலுத்தினார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்
ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், இன்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை அறிக்கை
நல்லகண்ணு உயிரிழப்பு குறித்து அரசு மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது,
''நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக பிப்.1ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 நாள்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும் அதி தீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர்.
இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாகக் குறைந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லகண்ணு அவர்கள் பிப்.25 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.