வைகோ நடைபயணம்: மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் வைகோவின் நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் பங்கேற்க திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மநீம உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்ததற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் விடுதலை புலிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதால், அந்த அமைப்பை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடக்க விழாவில் செல்வப் பெருந்தகை கலந்துகொள்ளவில்லை. மேலும், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என யாரும் பங்கேற்கவில்லை.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்துக்கு வருகைதந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்விலும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழக அரசை விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.