ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
ஜன நாயகன் தணிக்கைச் சான்று மேல்முறையீடு பற்றி...
ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனது.
தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன. 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை வருகின்ற வியாழக்கிழமை பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.