அரசு விடுதியில் பள்ளி மாணவர் பலி!
வேதாரண்யம் அருகே பள்ளி மாணவர் பலியானது தொடர்பாக...
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அரசு விடுதியில் தங்கி படித்து வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர் தரணிதரன், செவ்வாய்க்கிழமை காலையில் குளிர்ந்த நீரில் குளித்த நிலையில் பலியானார்.
வேளாங்கண்ணி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் மகன் தரணிதரன் (17).
இவர், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளியின் அருகே செயல்படும் அரசினர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
வழக்கம்போல பள்ளிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலையில் விடுதியில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளார்.
குளிர்ந்திருந்த நீரில் குளித்ததால் நடுங்கியபடி சீருடையை மாற்றிக் கொண்டிருந்தாராம். திடீரென மயங்கி விழுந்த மாணவரை விடுதி நிர்வாகத்தார் அருகே உள்ள வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாய் மேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.