சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை (ஜன.20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850, பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நிா்வாகிகளுடன், தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.
மேலும், வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்கள் என 1.20 லட்சம் பணியிடங்கள் உள்ளதாகவும், இதில் 65,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தங்கள் கோரிக்கைகளை ஏற்று செவ்வாய்க்கிழமை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வா் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சத்துணவுப் பணியாளா் சங்க நிா்வாகிகள் கேட்டுக்கொண்டனா்.