குடியரசு நாள் தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!
தொடர் விடுமுறையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக...
குடியரசு நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வார விடுமுறை மற்றும் குடியரசு நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜன. 23 (வெள்ளிக்கிழமை) 550 பேருந்துகளும், ஜன. 24 (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜன. 23 வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், ஜன. 24 சனிக்கிழமை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து ஜன. 23, 24 ஆகிய நாள்களில் 24 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஜன. 26 திங்கள்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்ப 800 சிறப்புப் பேருந்துகள் பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருப்பூர், பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்ளுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் ஜன. 26-ல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.