முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பு; சாதனைகளையும் அறியுங்கள்! கீர்த்தனாவுக்கு அன்பில் மகேஸ் பதில்!

அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளது பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 12:16 pm IST
அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு | அன்பில் மகேஸ் - கோப்புப் படம்
பகிர்:

கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள் என அமைச்சர் கீர்த்தனாவுக்கு பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

மேலும் அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனைகளையும் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப்பள்ளியில் ஆய்வு

Advertisement

Advertisement

தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சில நாள்களுக்கு முன் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கிய நிலையில் ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்துமாறு கீர்த்தனா வலியுறுத்தினார்.

அதேபோல கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்களிடம் கேளுங்கள் என ஆசிரியரிடம் கோரினார். இது கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்களை தரம் குறைத்து பார்க்கும் வகையில் இருப்பதாக பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ரீல்ஸ் மோகத்துக்காக இவ்வாறு விடியோ எடுத்து அரசுப் பள்ளியைத் தரம் குறைத்து காட்டுவதாக அமைச்சர் கீர்த்தனா மீது எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா, "நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்" என்று கூறினார்.

அமைச்சர் கீர்த்தனாவின் பதிவு

இதனிடையே கீர்த்தனா மற்றொரு பதிவில் அரசுப்பள்ளியின் தரம் குறித்து முந்தைய அரசை குறிப்பாக பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த பதிவில், "இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:

கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?

இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.

நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.

நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன்.

உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!

தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.

மேலும் ஒரு விஷயம்... இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!

என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!" என்று பதிவிட்டிருந்தார்.

அன்பில் மகேஸ் பதில்!

இதற்கு அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.

"அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்" எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம்.

ரீல்ஸ்-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல." என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த திமுக அரசில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய விடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

summary

Know about govt school students achievements too: Anbil Mahesh responds to Keerthana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments