நீதிக் கதைகள்! விஞ்ஞானியின் மதிப்பீடு!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
கிராமத்தின் வழியாக விஞ்ஞானி ஒருவர், கார் ஓட்டிச் சென்றபொழுது வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அருகில் கடை ஏதும் இல்லை. குறைந்தபட்சம் ஒரு மைல் சென்றால்தான் பெரிய ஊர் வரும். அவருடன் யாரும் வராத காரணத்தால் அவரே பஞ்சரான டயரை மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்து போல்ட்டையும் கழற்றிவிட்டு, டிக்கியில் இருந்த ஸ்டெப்னியை எடுக்கப் போகும்பொழுது கால் தடுக்கி கீழே விழுந்தார். அப்பொழுது தன் கையில் வைத்திருந்த போல்ட்கள் சிதறி அருகிலிருந்த ஒரு குட்டையில் விழுந்துவிட்டது.
குட்டையில் விழுந்த போல்ட்டுகளை எப்படி எடுப்பது என யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது, கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். வழிப்போக்கன் இவரைப் பார்த்து, "ஐயா.. என்ன ஆச்சு.. ஏதாவது உதவி வேண்டுமா?'' என வினவ, இவனிடம் இதைப் பற்றிச் சொல்லி என்ன ஆகப் போகிறது என விஞ்ஞானி எண்ணினார்.
Advertisement
Advertisement
"ஒன்றும் இல்லை... நீங்கள் போகலாம்'' எனக் கூறினார். அந்த வழிப்போக்கனும் கிளம்ப எத்தனிக்கும்பொழுது விஞ்ஞானிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. உடனே, "இந்தக் குட்டையில் விழுந்த என்னுடைய 4 போல்ட்டையும் எடுத்துத்தந்தால் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகின்றேன்'' என்றார்.
"ஓ... இதுதான் உங்களுடைய பிரச்னையா? நான் குட்டையில் இறங்கி எடுத்துத் தருவதில் ஏதும் ஆட்சேபணை இல்லை. அதைவிட ஒரு சுலபமான வழி உள்ளது. மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டைக் கழற்றி இந்தச் சக்கரத்தை மாட்டி, அடுத்த ஊரில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்'' என்று வழிப்போக்கன் சொல்லியதும், பெரிய விஞ்ஞானியான நமக்கு இந்த சுலபமான வழி தெரியாமல் போய்விட்டதே என்றும், வழிப்போக்கனைத் தவறாக எடை போட்டதை எண்ணியும் வெட்கித் தலை குனிந்தார்.