நீதிக் கதைகள்! பயம்தான் பேராசைக்குக் காரணம்!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
அந்தக் குரு தன் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது குரு சீடர்களிடம், 'பயம்தான் பேராசைக்குக் காரணம்!' என்று போதித்தார்.
சீடர்களுக்கு குரு சொன்னது விளங்கவில்லை.
பயம் என்பது வேறு, பேராசை என்பது வேறு. பயத்திற்கும் பேராசைக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? என்று குழம்பினார்கள்.
Advertisement
Advertisement
தங்கள் சந்தேகத்தை குருவிடமே கேட்கவும் செய்தார்கள். குரு புன்னகைத்தபடி, 'இக்கேள்விக்கான பதிலை உங்களுக்கு நாளை சொல்கிறேன்!' என்று சொல்லிவிட்டார்.
இரவு உணவு நேரம்.
குருவும் சீடர்களும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது ஆசிரமத்தின் சமையற்காரர் அங்கு வந்தார்.
அவர் குருவிடம், 'சுவாமி! நம் கைவசம் இருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. நாளை காலை யாருக்கும் உணவு இருக்காது போலிருக்கிறது. வெளியூர் சென்று பொருள்கள் வாங்கி வர எப்படியும் நண்பகல் ஆகிவிடும்'' என்று சொன்னார்.
சமையற்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டு ஜாடையால் பதில் சொல்லி அனுப்பினார். எல்லோரும் அமைதியாக உணவு உண்டு முடித்தனர். சீடர்கள் அனைவரும் உண்டு முடித்ததும் குரு அவர்களிடம் 'நீங்கள் வழக்கமாக உண்பதைவிட இப்போது சற்று அதிகம் உணவு உட்கொண்டீர்களா?' என்று கேட்டார்.
சீடர்களால் குருவிடம் உண்மையை மறைக்க முடியாதே! அனைவரும் 'ஆமாம்!' என்றனர்.
குரு கேட்டார் 'நாளை இரவுதான் இனி அடுத்த வேளை உணவு உண்ண முடியும் என்று தெரிந்தவுடன் நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாக உணவு உட்கொண்டீர்கள். நாளை இரவுவரை பசியைத் தாங்க முடியுமா, முடியாதா என்ற பயம்தான் இப்போது நீங்கள் அதிகம் உண்டதன் காரணம். ஆக பயம்தான் பேராசைக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
சீடர்களும் குருவின் விளக்கத்தை ஒப்புக்கொண்டனர்.