முகப்பு
நிகிதா
தமிழ்நாடு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக...

தமிழ்நாடு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக...

Updated On : 4 மார்ச், 2026 at 9:08 AM
நிகிதா
பகிர்:

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். விசாரணையின் போது, தனிப்படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தனிப்படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் (டி.எஸ்.பி.) சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் கொலை வழக்கில் புகாரளித்த மதுரையைச் சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாகப் புகார் அளித்த நிகிதா, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக இன்று(மார்ச் 4) நேரில் ஆஜரானார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, நிகிதா அளித்த புகாரை முடித்து வைக்க உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து உங்களது கருத்து என்ன என நீதிபதி, நிகிதாவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது நிகிதா கூறுகையில், ”எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை, புகார் கொடுத்த வழக்கை முடித்து வைக்கலாம்” என்றார்,

இதைத் தொடர்ந்து நீதிபதி கூறுகையில், நிகிதாவின் கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

summary

Nikitha, the complainant who reported the disappearance of jewelry in connection with the murder case of Madapuram temple guard Ajith Kumar, appeared before the Madurai District Additional Chief Criminal Court.

முழு கட்டுரையைப் படிக்க →