தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓ. பன்னீர்செல்வம் மீது பதிவுசெய்யப்பட்ட 4 வழக்குகள் ரத்து
தேர்தல் விதிமுறைகளை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது சுமத்தப்பட்ட 4 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
2024 மக்களவைத் தேர்தலின்போது, ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது, அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாகவும், இரவு 10 மணிக்குமேல் பட்டாசு வெடித்து பிரசாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்டவை தொடர்பாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய காவல் நிலையங்களில் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்ப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, இந்த 4 வழக்குகளில் 3 வழக்குகள் தகுதியான அதிகாரிகளால் புகார் அளிக்காமல், காவல்துறையினரின் புகாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும், ஒரு வழக்கில் காலதாமதமாக குற்றப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறி, 4 வழக்குகளையும் ரத்து செய்யுமாறு ஓபிஎஸ் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஓபிஎஸ் மீதான 4 வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.