விசாரணையின்போது இளைஞர் பலி: மானாமதுரையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
மானாமதுரையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
மானாமதுரையில் போலீஸார் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவாகரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், தனியார் பள்ளிகளுக்கு இன்று(மார்ச் 9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை சியோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு உணவகம், கோழிக் கடையில் பணிபுரியும் தொழிலாளர்களான ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரையும் வாளால் வெட்டியதாக மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், அதே பகுதியைச் சேர்ந்த குணா ஆகியோரை மானாமதுரை போலீஸார் தேடி வந்தனர்.
மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க போலீஸார் அங்கு சென்றபோது, தப்பியோட முயன்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தனியார் பள்ளிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.