பெங்களூர் தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து!
பெங்களூர் பள்ளி கட்டடத்தில் தீ விபத்து பற்றி..
பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி கட்டடத்தில் சனிக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது,
நாகதேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் காலை சுமார் 9.30 மணியளவில் இந்த தீ விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
சனிக்கிழமை என்பதால், வழக்கமான வகுப்புகள் இல்லாததால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உயிரிழப்புகள் ஏதுவும் பதிவாகவில்லை.
சம்பவ இடத்துக்கு வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நான்காவது தளத்தில் அமைந்துள்ள கலையரங்கில் தீ பற்றியதைத் தொடர்ந்து, கட்டடம் முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்தது.
பள்ளியில் சேருவதற்காக, ஒரு சில மாணவர்கள் அறிமுக அமர்வில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிக்கு வந்திருந்தனர். தீ விபத்தையடுத்து, உடனடியாக அங்கிருந்த மாணவர்களையும், பள்ளி ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
சில மணி நேரங்களுக்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.