உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - மு.க. ஸ்டாலின்
திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பதிவு பற்றி...
வரும் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற நிர்வாகிகள் தங்கள் கடும் உழைப்பைக் கொடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(மார்ச் 16) நடைபெற்றது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் பிரசாரம், பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
வரும் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என்றும் அதற்கு திமுகவினர் தங்களுடைய கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும், கட்சியினரிடையே தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் கட்சியின் வெற்றியைப் பாதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடலின் சாதனைகள்!
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்! இதுதான் தி.மு.க.
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!" என்று பதிவிட்டுள்ளார்.