தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!
தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை...
தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று(மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் சோதனை, விளம்பரங்கள் அழிப்பு என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, நாதக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் பிரசார அனுமதி, நட்சத்திர வேட்பாளர்கள், கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு ஆகும் செலவு என தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இதேபோல இன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.