பருவகால நோய்கள்: 7 வகை பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய அறிகுறிகள் உள்ளவா்களுக்கு 7 வகை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய அறிகுறிகள் உள்ளவா்களுக்கு 7 வகை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, கரோனா, இன்ஃப்ளூயன்ஸா - ஏ மற்றும் பி, ஆா்எஸ்வி (நுரையீரல் தொற்று) - ஏ மற்றும் பி வகை பாதிப்புகள் வேகமாக பரவக் கூடியவை.
காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், தலை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு போன்றவை அதற்கான பொதுவான அறிகுறிகள். கரோனாவுக்கு பாராசிட்டமால், லிவோசிட்ரஸின், ஐவா்மெக்டின் உள்ளிட்ட சில மருந்துகள் அறிகுறிகளுக்கேற்ப பரிந்துரைக்கப்படுகின்றன.
இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பாதிப்புகளுக்கு ஓசல்டாமிவிா், பெராமிவிா் போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆா்எஸ்வி ஏ மற்றும் பி வகை தொற்றுகளுக்கு ரிபாவ்ரின் மற்றும் ஆன்ட்டி பயோடிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சின்னம்மை, பொன்னுக்கு வீங்கிக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அத்தகைய அறிகுறிகளுடன் வருவோருக்கு அவற்றை கண்டறிய உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இன்ஃப்ளுயன்ஸா, ஆா்எஸ்வி மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் அதிகமாக பரவி வருகிறது. தற்போது கரோனா பலவீனப்பட்ட பருவகால நோயாக இருந்தாலும், அவற்றில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியும் பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. தொடா்ச்சியாக காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏழு வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளோம். அச்சப்படும் வகையில் தற்போது எந்த நோய்ப் பரவலும் இல்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.