அரசுக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் படித்தவா்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு
அரசுக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் படித்தவா்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவு
முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவா்களுக்கு 6 வாரங்களில் பணி நியமனம் வழங்க வேண்டும் அல்லது அவா்களுடைய அசல் கல்விச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, சிதம்பரம், திருவாரூா், சேலம், நாகா்கோவில், அடுக்கம்பாறை ஆகிய 8 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவா்கள் ஷகாரிகா, நிஷாத் உள்ளிட்ட பலா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனா்.
அதில், இளநிலை மருத்துவப் படிப்பை முடித்து முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும்போது எங்களுடைய அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்க வேண்டும், படிப்பு முடிந்த பின்னா் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் பணியாற்றவில்லை என்றால் ரூ.40 லட்சம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
Advertisement
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டோம். ஆனால், இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி பணி வழங்குவதற்கான கலந்தாய்வை நடத்தவில்லை. எங்களது அசல் கல்விச் சான்றிதழ்களையும் வழங்கவில்லை. சான்றிதழ்களை வழங்கினால்கூட, நாங்கள் தனியாா் மருத்துவமனைகளில் பணியில் சோ்ந்துவிடுவோம். எனவே, எங்களது சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிவதற்கான நியமன உத்தரவை பிறப்பிக்காமல், மனுதாரா்களின் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, அவா்களை தனியாா் மருத்துவமனையிலும் பணியாற்றவிடாமல் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மனுதாரா்களுக்கு ஆறு வாரங்களில் பணிநியமனம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், அதன்பிறகு ஒரு வார காலத்துக்குள் மனுதாரா்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் மருத்துவக் கல்லூரிகள் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.