எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?
திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?
திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று(மார்ச் 29) வெளியிடப்பட்டது.
திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், அமைச்சா் கோவி.செழியன், டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்பு உள்பட பல்வேறு கட்டங்களைக் கடந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த முறையும் ஆட்சியமைத்தால் திமுக அரசு என்னென்ன மக்கள் நலத் திட்டங்களைத் தமிழகத்துக்காகச் செய்யவிருக்கிறது? என்பதை உள்ளடக்கி திமுகவின் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதி அறிக்கை இன்று (மார்ச் 29) வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர்கள் முன்னிலையில் திமுக தேர்தல் அறிக்கை குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்ததுடன் திமுக அரசின் கடந்த ஐந்தாண்டுகால சாதனையைப் பட்டியலிட்டார். அதனைத்தொடர்ந்து, தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் வாக்காளர்களைக் கவரும் முக்கிய வாக்குறுதியாக, மகளிர் உரிமைத்தொகை ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வாக்குறுதிகள் :
எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்கள் இலவசம்
10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்
5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்
முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர, ஆண்டு வருமான வரம்பு ரூ. 5 லட்சமாகவும் காப்பீடு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்
புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்படும்
சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு தொழில்முனைவோராக முன்னேற பிணை எதுவும் இன்றி 5 லட்சம் ரூபாய் மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்படும்
உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும்
முதியோர் உதவித்தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்
மீன்பிடி தடை காலம் நிவாரணம் ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்
செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்
ரூ. 20,000 கோடியில் மண்டல வாரியாக சிறப்பு திட்டங்கள்
வருமான வரி செலுத்தாத குடும்பங்களில் இல்லத்தரசிகள் வீட்டு உபயோக சாதனங்கள் வாங்க இல்லத்தரசி என்ற புதிய திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும்
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்படும்
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்
பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும். பேரிடர் இழப்பீடுகளாக நெற்பயிற்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 25,000 ஆகவும், நீண்ட கால பயிர்களுக்கு ரூ. 27,000 ஆகவும், மானவாரி பயிர்களுக்கு 12,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்
அரசுத் துறையில் எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும்
பொள்ளாச்சியில் மொழிப்போர் வரலாறு காட்சிக் கூடம் அமைக்கப்படும் என்று மொத்தம் 50 பிரிவுகளின்கீழ் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.