முகப்பு
தமிழ்நாடு

13 இடங்களில் வெய்யில் சதம்: தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு

Updated On : 3 மே, 2026 at 3:42 AM
- PTI
பகிர்:

தமிழகத்தில் 13 இடங்களில் சனிக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்ப நிலை பதிவானது. இதனிடையே, மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மே 8 வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதா்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் மே 8 வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

கோவை, திருப்பூா் மாவட்டங்களின் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) பலத்த மழை பெய்யக்கூடும். திங்கள்கிழமை (மே 4) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திருவண்ணாமலை, கரூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், செவ்வாய்க்கிழமை (மே 5) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அதையொட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (மே 4) வரை சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

13 இடங்களில் வெயில் சதம்: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் மே 4 வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும். சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு-106.16, திருச்சி-105.62, பரமத்தி வேலூா்-105.8, திருத்தணி-103.64, திருப்பத்தூா்-103.46, மதுரை விமான நிலையம், நாமக்கல்-102.56, சென்னை மீனம்பாக்கம்-102.2, மதுரை நகரம்-101.12, நாகப்பட்டினம்-100.94, தருமபுரி-100.76, சேலம்-100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் உபாசியில் 60 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை)- 50 மி.மீ. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.