விஜய் வெற்றிக்காக திருத்தணி முருகன் கோயிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் தியானம்!
திருத்தணி முருகன் கோயிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் தியானம் மேற்கொண்டது தொடர்பாக...
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தியானத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் , 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலுக்கு தவெக தலைவர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் காலை, 6.30 மணிக்கு முருகன் மலைக்கோயிலுக்கு வந்தார். பின்னர், அவர் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று மூலவர், உற்சவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி, மகன் விஜய் மற்றும் அக்கட்சி போட்டியிட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என வழிப்பட்டனர்.
Advertisement
அதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பிராசதங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும், மலைக்கோயிலில் மகன் விஜய் முதல்வராக வேண்டும் என 10 நிமிடம் தியானம் செய்தார். பின்னர் கோயில் தேர்வீதியில் இருந்த உடல் ஊனமுற்றோர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் பணஉதவி செய்துவிட்டு சென்னைக்கு திரும்பி சென்றார்.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசம் செய்து தியானத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் கூறுகையில், ”அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், நாடு நன்றாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.