நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்! ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்!
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமையக்க உரிமை கோரும் தவெக தலைவர் விஜய்...
தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நாளை(மே 6) ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தயாராகி வருகிறது.
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இந்நிலையில் இன்று(மே 5) காலை பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதையடுத்து ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். அதன்படி நாளை விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.
ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக சார்பில் ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.