எம்.எல்.ஏ-வாக வெற்றி! எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் சி.வி. சண்முகம்!!
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி. சண்முகம் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ததைப் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி. சண்முகம் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. மேலும், காங்கிரஸுடனான கூட்டணி ஆதரவைப் பெற்ற தவெக 112 எனும் எண்ணிக்கையுடன் தற்போது இருக்கிறது.
யார் யார்? ஆதரவு தருவார்கள், விஜய் எவ்வாறு ஆட்சியமைக்கப்போகிறார் என்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அதிமுக எம்.எல்.ஏ-க்களில் எடப்பாடி பழனிசாமியைத் தவிர்த்து 40-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இந்தச் சூழலுக்கு மத்தியில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் இன்று திடீரென தில்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றிருந்த சி.வி. சண்முகம், தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, அவரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வெங்கடேசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் நிரஞ்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் விஜய் விக்ரம் உள்பட 21 பேர் போட்டியிட்டனர்.
அங்கு மொத்தம் 89.64 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில், சி.வி.சண்முகம் 82,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் நிரஞ்சன் 52,312 வாக்குகள் பெற்று 2-வது இடமும், தேமுதிகவின் வெங்கடேசன் 46,267, நாதக விஜய் விக்ரம் 4,386 வாக்குகளும் பெற்றிருந்தனர்.