எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என ஆளுநர் கேள்வி எழுப்பியிருப்பதாகத் தகவல்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 108 தொகுதிகளில் வென்ற தவெக கட்சித் தலைவர் விஜய் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டது. விஜய் வெளியே வந்த போது காவல்துறை வாகனமும் பாதுகாப்புக்கு வந்தது எதன் அடிப்படையில் என்று ஆளுநர் கேள்வி எழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து நேற்று தவெக தலைவர் விஜய் உரிமைகோரிய நிலையில் இன்று காலை மீண்டும் ஆளுநரை சந்தித்தார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் தம்மை சந்தித்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தலைமைச் செயலர் சாய்குமார் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
அப்போது, எதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? வழங்கப்பட்டது என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதோடு, டிஜிபி மற்றும் தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மே 4ஆம் தேதி விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டதோடு, கான்வாய் வழங்கப்பட்டு, நேற்று திரும்பப் பெறப்பட்டது.
மேலும், சென்னை மெரினாவில் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வரும் தகவல்கள் குறித்தும் ஆளுநர் அறிவுறுத்தி, புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை அமைதியான முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.