தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றி...
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 126 பேர் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களில் 233 பேரின் சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் டி. அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
பிரமாணப் பத்திரத்தில், 233 பேரில் 126 (54%) எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக 56 (24%) எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒரு எம்.எல்.ஏ. தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில், அதிகபட்சமாக தவெக எம்.எல்.ஏ.க்கள் 107 பேரில் 41 (38%) பேர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் 5-இல் 3 (60%) பேர், திமுக 59-இல் 37 (63%) பேர், அதிமுக 47-இல் 33 (70%) பேர், பாமக 4-இல் 4 (100%) பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.
முந்தைய ஆண்டுகளில் 2021 - 134 (60%), 2016 - 75 (34%), 2011 - 70 (30%) குற்ற வழக்குகள் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.