அதிமுகவிலிருந்து விலகினார் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி. கந்தவேல்!
அதிமுகவிலிருந்து விலகியது பற்றி..
கோவை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகியும், சூலூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான வி.பி. கந்தவேல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இந்த இயக்கத்தில் உண்மைத் தொண்டனாகப் பணியாற்றியதாகவும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படாத போதிலும் கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் கட்சியில் அரங்கேறும் நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
தற்போதைய கட்சியின் போக்கு தலைவர்கள் காட்டிய பாதையிலிருந்து விலகிச் செல்வதாகக் கருதுவதால், மன அழுத்தத்துடன் கழகப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஊராட்சித் தலைவராக இருந்தபோது தேசிய விருது பெற ஒத்துழைப்பு நல்கிய முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மக்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ள அவர், வரும் காலங்களில் பொதுமக்களின் ஆதரவோடு தொடர்ந்து பொதுப்பணியில் ஈடுபடப் போவதாகவும் தனது அறிக்கையில் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். கோவையில் முக்கிய நிர்வாகி ஒருவரின் இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.