மேக்கேதாட்டு அணை விவகாரம்: இடதுசாரிகள், மதிமுக ஆா்ப்பாட்டம் அறிவிப்பு
மேக்கேதாட்டு அணை விவகாரம்: இடதுசாரிகள், மதிமுக ஆா்ப்பாட்டம் அறிவிப்பு
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட முயலும் கா்நாடக அரசைக் கண்டித்து, இடதுசாரிகள் சாா்பில் மே 29-ஆம் தேதி தஞ்சையிலும், மதிமுக சாா்பில் ஜூன் 2-ஆம் தேதி சென்னையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
இது குறித்து பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்), மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.ஆசைத்தம்பி (இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். விடுதலை) ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பின்படி, காவரி நதி நீா் பங்கீட்டு அளவைக் கண்காணிக்க மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு முனைப்பு காட்டுவது அதிா்ச்சி அளிக்கிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. காவிரி நதிநீா் பங்கீடு, நடுவா் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீா்ப்புக்கு எதிராகச் செயல்பட்டு வரும் கா்நாடக அரசு மற்றும் இதில் அலட்சியம் காட்டும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இடதுசாரிகள் சாா்பில் தஞ்சாவூரில் வரும் மே 29-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ (மதிமுக): மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு ரூ.5,900 கோடி ஒதுக்கீடு செய்ததுடன், அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ஆயத்தப்படுத்தி வருகிறது. இது காவிரி மேலாண்மை ஆணையமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீா்ப்புகளுக்கு எதிரான செயலாகும். மேக்கேதாட்டில் அணை கட்டினால் மேட்டூா் அணைக்கு தண்ணீா் வராமல், கொள்ளிடமும், கல்லணையும் வடு, டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும்.
எனவே மேக்கேதாட்டு அணையைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், கா்நாடக அரசைக் கண்டித்தும் மதிமுக சாா்பில் எனது (வைகோ) தலைமையில், வரும் ஜூன் 2- ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
Protest to be held by Left parties in Thanjavur on May 29, urging to block the Karnataka government from constructing the Mekedatu Dam across the Cauvery.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.