முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

காவிரியில் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி தஞ்சையில் இடதுசாரிகள் சார்பில் ஆர்பபாட்டம் நடைபெற உள்ளது.

இடதுசாரிகள்(கோப்புப்படம்) - IANS
பகிர்:

காவிரியில் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி தஞ்சையில் இடதுசாரிகள் சார்பில் ஆர்பபாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கையில், தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தின் உயிர் நாடியாக காவிரி நதிநீர் அமைந்திருக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 20ஆம் நூற்றாண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர்நாடக அரசு, தன்னிச்சையாக நிராகரித்து வந்ததால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி, நீர் பங்கீட்டு அளவை கண்காணிக்க மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்து, பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கியது. கர்நாடக மாநில அரசின் அத்துமீறல் நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், தமிழ்நாடு அரசும் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கர்நாடக அரசின் முறையீட்டை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், கடந்த 2025 நவம்பர் 13 ஆம் தேதி " மேக்கேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்யலாம்" என தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு சார்பு தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2025 டிசம்பர் 2 ஆம் தேதி தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசும் டிசம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த வழக்கில் அலட்சியம் காட்டி வந்த நிலையில், " மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்த புதிய விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்" என கர்நாடக மாநில அரசின் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

"காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை" என ஆத்திரமூட்டும் வகையிலும் பேசியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு, நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிற கர்நாடக அரசையும், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி, வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து, மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 29.05.2026 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தஞ்சாவூரில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு- லெனினிஸ்டு) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Protest to be held by Left parties in Thanjavur on May 29, urging to block the Karnataka government from constructing the Mekedatu Dam across the Cauvery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.