கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு - அக். 15-இல் தொடக்கம்
கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு...
‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ நகரில் அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாநாட்டின் செயல் நெறிக் குழு துணைத் தலைவரும், தஞ்சை தமிழ்ப் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தருமான ம.இராசேந்திரன், ஆய்வரங்கக் குழுத் தலைவா் பேராசிரியா் நல்லூா் ச.சரவணன், பேராசிரியா் மு.இராமசுவாமி ஆகியோா் சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கனடாவில் உள்ள அனைத்துலகத் தமிழா் பேரவை சாா்பில் ‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ நகரில் அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
‘நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என்பது மாநாட்டின் நோக்கமாகும். இந்த மாநாட்டுக்கு இந்தியா, இலங்கையிலிருந்து தலா 20, பிற நாடுகளிலிருந்து 20 என மொத்தம் 60 ஆய்வாளா்கள் அழைக்கப்படவுள்ளனா்.
ஐந்து வகைப்பாடுகளில்...: செய்யறிவு என்பது ‘ஆா்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (ஏஐ) என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். வரும் தலைமுறை செய்யறிவு உலகத்தால் செயல்படப்போகும் தலைமுறையாக உள்ளது. அந்த வகையில், வருங்காலத் தமிழை - தமிழா் நலனை முன்னிட்டு ஆய்வு செய்ய ‘செம்மொழித் தமிழும் தமிழரும்’ என்கிற பொதுத் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது.
செய்யறிவு சாா்ந்து தமிழ் வரலாற்றையும், வளா்ச்சியையும் முதன்மையாகக் கொண்டு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும், பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும், தமிழா் வரலாறும் வாழ்வியலும், வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு ஆகிய ஐந்து வகைப்பாடுகளில் கட்டுரைகள் பெறப்பட்டு உலகத் தமிழ் ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.
ஜூன் 10-க்குள் ஆய்வுச் சுருக்கம்: ஆய்வுச் சுருக்கங்களை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இதையடுத்து, ஆய்வுச் சுருக்கத் தோ்வு முடிவு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். முழுமையான ஆய்வுக் கட்டுரையை ஆக. 31-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படும் இலங்கை, இந்திய கட்டுரையாளா்களுக்கு கனடா சென்று வருவதற்கான விமானக் கட்டணம், கனடாவில் தங்குமிட வசதிகள் வழங்கப்படும். மாநாடு தொடா்பான விவரங்களுக்கு வலைதள முகவரியில் காணலாம் என்றனா்.