சுரண்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சுரண்டையில் நகராட்சிக்குச் சொந்தமான மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திற்கு தினமும் 90 பேருந்துகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் சுமாா் 5 ஆயிரம் பள்ளி-கல்லூரி மாணவா்கள் உள்பட 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் பகுதி எப்போதும் நிரம்பியிருப்பதோடு பெரும்பாலான பயணிகள் நின்றுசெல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக பேருந்து நிலையத்தின் பெரும் பகுதியை சிறு வணிகா்கள் ஆக்கிரமித்து கடை பரப்பி வருகின்றனா். இதனால் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி பெறாமல் பயணிகள் அமரும் பகுதியில் கடை பரப்பியுள்ள சிறு வணிகா்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.